December 27
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,மருத்துவர் பொன்னம்பலம்,ஜீவநாரயணன்,கவிஞர் மன்னன்,புலவர் வீராசாமி ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஆறகழூர் வெளிப்பாளையம் அருகே உள்ள விளைநிலத்தில் கல்வெட்டு ஒன்றும்,நவகண்ட சிற்பம் ஒன்றும் கண்டறியப்பட்டது. கல்வெட்டு 95 செ.மீ நீளமும்,37 செ.மீ அகலமும்,20 செ.மீ தடிமனும் உள்ள ஒரு பலகைக்கல்லில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.முன்பக்கம் 16 வரிகளிலும் பின்பக்கம் 23 வரிகளிலும்,பக்கவாட்டில் 9 வரிகளிலும் கல்வெட்டு மூன்று பக்கங்களில் உள்ளது. ஸ்வஸ்திஸ்ரீ மகாமண்டலேசுவரர் என கல்வெட்டு துவங்குகிறது.இது 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டாகும். ஆறகழூரில் இதுவரை தொல்லியல் துறையால் 48 கல்வெட்டுகளும், சேலம் வரலாற்று ஆய்வுமையத்தால் 5 கல்வெட்டுகளும் படிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
இவை அனைத்திலும் இல்லாத சில புதிய செய்திகளை இந்த கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது. ஆறகழூரை மலாடாகிய ஜனநாத வளநாட்டு ஆற்றூர் கூற்றத்து ஆறகழூர் என எல்லா கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன. தற்போது கண்டறியப்பட்ட கல்வெட்டானது மலாடாகிய ஜனநாத வளநாட்டு மகதை மண்டலத்து நரையூர் கூற்றத்து தென்கரை சீர்மையான ஆறகழூர் எனகுறிப்பிடுகிறது.
சோழர்கள்,வாணகோவரையர்கள்,பாண்டியர்கள்,விஜயநகரபேரரசு,நாயக்கர்கள் கல்வெட்டுகள் மட்டுமே இது வரை கிடைத்துள்ளது. வாண்டையார்களின் கல்வெட்டு இப்போதுதான் முதன்முறையாக கிடைத்துள்ளது. இந்த வாண்டையார்கள் நாயக்க மன்னர்களின் கீழ் அதிகாரிகளாக பணியாற்றியுள்ளனர்.
குமாரமுத்து கிருஷ்ணப்ப வாண்டையார் ஆறகழூர் திருகாமீசுரமுடைய தம்பினார் கோயிலுக்கு குமாரபாளையம் என்ற ஊரை தானமாக கொடுத்துள்ளார். அப்போது ஆறகழூரில் வசித்து வந்த நல்ல குடியை சேர்ந்த நாற்பத்தெண்ணாயிரம் என்பவர்களை குமாரபாளையத்தில் புதிய குடிகளாக குடியேற அனுமதி அளித்துள்ளனர். இந்த நாற்பத்தெண்ணாயிரவர் என்பவர்கள் வேளாண்மை மற்றும் வணிகம் செய்த குடிகளாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
வீடுகளில் துளையிட்டு திருடும் கன்னமிட்டவன், பயணத்தின் போது வழிமறித்து திருடும் வழிப்பறிச்சவன்,மற்றவர்கள் பொருட்களை அபகரிக்கும் எடுப்பு எடுத்தவன் போன்ற குற்றச்செயல்களை செய்பவர்களை ஒரு போதும் குமாரபாளையத்தில் குடியேற்றக்கூடாது என ஆணையிட்டு உள்ளனர். அங்கு குடியேறும் நற்குடியினர் எல்லா உரிமைகளையும் பெற்று மகிழ்சியாக வாழ்வார்கள்.இந்த தானத்தையும் கட்டளையையும் மீறுபவர்கள் ஒன்றுமில்லாமல் போவார்கள்.இந்த தானத்தை அழிப்பவர்கள் கங்கை கரையிலே காராம் பசுவை கொன்ற பாவத்தை அடைவார்கள் என கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது.
நவகண்ட சிற்பம் இந்த கல்வெட்டுக்கு அருகிலேயே ஒரு நவகண்ட சிற்பமும் காணப்படுகிறது.போரின் போது தன் நாடு வெற்றி பெற கொற்றவைக்கு தன் உடலின் ஒன்பது பாகங்களை அரிந்து படையல் இட்டு தன்னைத்தானே பலி கொடுத்துக்கொண்ட வீரனுக்காக வைக்கப்பட்டுள்ள நவகண்ட சிற்பம் இதுவாகும்.இந்த வயல்வெளியில் கறுப்பு சிகப்பு பானை ஓடுகள் காணப்படுகின்றன. எனவே இந்த இடம் முன்பு மக்களின் வாழ்விடப்பகுதியாக இருந்தது உறுதியாகிறது.
இந்த பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
CFCM News)
(Centre for Community Media