May 27
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுத்தோறும் ஏற்காடு கோடைவிழா மற்றும் மலர்க்கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் இந்த ஆண்டும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 44-வது ஏற்காடு கோடைவிழா மற்றும் மலர்க்கண்காட்சி வருகின்ற 31.05.2019 வெள்ளிக்கிழமை முதல் 02.06.2019 ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறவுள்ளது.
ஏற்காடு அண்ணா பூங்காவில் 1 லட்சத்திற்கு மேற்பட்ட மலர்களை கொண்டு மலர்க்கண்காட்சி தோட்டக்கலைத்துறையின் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படவுள்ளது. மேலும், காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சி ஆகியன அமைக்கப்படவுள்ளது. கோடைவிழாவில் அனைத்துத்துறைகளையும் ஒருங்கிணைந்து தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணிவிளக்க முகாம் நடத்தப்படவுள்ளது.
கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்லப் பிராணிகள் (நாய்கள்) கண்காட்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஆரோக்கிய குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவு போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத்துறையின் சார்பில் படகு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
சுற்றுலாத்துறை மற்றும் கலைப்பண்பாட்டுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன. கோடைவிழா மலர்காட்சி பள்ளி குழந்தைகள் பார்த்து பயன் பெறவேண்டும் என்ற நோக்கில் 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரோஹிணி ரா.பாஜிபாகரே, அவர்கள் தெரிவித்துள்ளார்.
CFCM News
(Centre for Community Media)